islamiyadawa.com_Tamil Islamic website based on Quran and Hadeeth

ஜகாத்துல் ஃபித்ர்

ஆக்கம்: அபூ ஆமினா பிலால் பிலிப்ஸ்

மொழிபெயர்ப்பு: அபூஃபரீதா

இந்தப் பக்கத்தை நண்பர்களுக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்

(இஸ்லாத்தில் ஐந்து கடமைகள் தவிர வேறு கடமை இல்லை என்று சிலர் தவறாக புரிந்து வைத்துள்ளார்கள். ரமளான் மாதத்தில் நோன்பு வைப்பது கடமை என்பதை அறிந்தவர்கள் அதே மாதத்தில் ஜகாத்துல் ஃபித்ரைப் பற்றி பலர் அறிந்திருக்கவில்லை. இந்தக் கட்டுரை ஜகாத்துல் ஃபித்ரை தெளிவாக விளக்குகிறது. - எடிட்டர்ஸ்)

பொருள்:

    ஜகாத்துல் ஃபித்ர் என்பது ஸதக்கத்துல் ஃபித்ர் என்றும் அழைக்கப்படுகிறது. ஃபித்ர் என்ற வார்த்தையின் பொருள் இஃப்தார் என்பதற்குறிய பொருள் போன்றது, அதாவது நோன்பு திறப்பது என்பது பொருள். இது ஃபதூர் என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்திருக்கிறது, இதன் பொருள் காலை உணவு என்பதாகும். இஸ்லாமிய வழக்கில் ஜகாத்துல் பித்ர் என்ற பெயர் ரமளான் மாதத்தின் இறுதியில் வழங்கப்படும் தர்மத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

வகை:

    ஸதக்கத்துல் ஃபித்ர் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் வாஜிப் கட்டாயக் கடமையாகும், அது ஆணாகட்டும் பெண்ணாகட்டும், சிறுவராகட்டும், வாலிபராகட்டும், அதை வழங்குவதற்குறிய பொருள் வசதியிருந்து விட்டால் அவர் மீது கடமையாகும். இந்த தர்மம் கட்டாயமானது என்பதற்கான ஆதாரத்தை நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் காணக்கிடைக்கிறது.

    இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

    நபி (ஸல்) அவர்கள் ஜகாத்துல் ஃபித்ரை முஸ்லிமான ஒவ்வொரு அடிமைக்கும், சுதந்திரமானவனுக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறுவனுக்கும் முதியவருக்கும் ஒரு ஸாஉ அளவு உலர்ந்த பேரீத்தம் பழம் அல்லது ஒரு ஸாஉ அளவு பார்லி கொடுப்பதை கட்டாயக் கடமையாக்கினார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது)

    ஒரு குடும்பத்தலைவர் அந்த குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்காக தேவையான அளவை கொடுக்க வேண்டும், இதற்கான ஆதாரம்:

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் நாங்கள் எங்களுடைய சிறுவர்கள் முதியவர்கள் சுதந்திரமானவர்கள் அடிமைகள் இவர்களுக்காகவும் ஒரு ஸாஉ அளவு தானியம், பாலாடைக்கட்டி அல்லது உலர்ந்த திராட்சை போன்றவற்றை கொடுத்து வந்தோம்.

    (அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம்)

முக்கியத்துவம்:

    இஸ்லாமிய சமுதாயத்தில் செல்வம் எல்லோரிடமும் சென்றடைவதில் ஜகாத் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது, அது போலவே ஸதக்கத்துல் ஃபித்ரும் அதே வேலையைச் செய்கிறது. ஆனால் ஸதக்கத்துல் ஃபித்ரில் ஒவ்வொருவரும் தனக்காகவும் தன்னைச் சார்ந்தவருக்காகவும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கணக்கிட்டு அதை வாங்குவதற்கு தகுதியானவர்களிடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு சமூக அக்கறை வளர இந்த ஸதக்கத்துல் ஃபித்ர் முக்கிய வேலையைச் செய்கிறது. பணக்காரர்கள் ஏழைகளோடு நேரடி தொடர்பு கொள்ளவும், ஏழைகள் பரமஏழைகளோடு தொடர்பு கொள்வதற்கும் இதன் மூலம் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். சமூகத்தன் பலதரப்பட்ட மக்கள் ஒருவரையொருவர் இவ்வாறு தொடர்பு கொள்வது உண்மையான சகோதரத்துவ இணைப்பை கட்டிக்காக்கவும் இஸ்லாமியர்களிடையே பரஸ்பர அன்பை வளர்க்கவும் ஏழைகளிடம் பணக்காரர்கள் பரிவோடு நடந்து கொள்ளவும் உதவுகிறது.

நோக்கம்:

    ஜகாத்துல் ஃபித்ர் என்பது நோன்பாளிகள் நோன்பு காலங்களில் அவர்களையும் அறியாமல் நேர்ந்து விட்ட தவறுகளை நிவர்த்தி செய்வதற்காகவே ஆகும். அதோடு ஜகாத்துல் ஃபித்ர் ஏழைகளுக்கு நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கான பொருட்களைக் கிடைக்கச் செய்கிறது.

    இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

    நோன்பாளிகளிடம் நேர்ந்து விட்ட சிறு தவறுகளுக்காகவும் வீணான பேச்சுக்களுக்காகவும் ஏழைகள் உண்டு மகிழ வேண்டும் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் ஜகாத்துல் ஃபித்ரை கட்டாயமாக்கினார்கள். யாரெல்லாம் பெருநாள் தொழுகைக்கு முன்பு கொடுத்து விட்டனரோ அது ஜகாத்துல் ஃபித்ராக ஏற்றுக் கொள்ளப்படும், தொழுகைக்கு பிறகு அவர் கொடுத்தால் அவர் ஸதக்கா கொடுத்தவராவார். (நூல்கள்: அபூதாவூது, இபுனுமாஜா)

    ஆக, ஸதக்கத்துல் ஃபித்ரின் நோக்கமானது முஃமின்களின் ஆன்மீக வளர்ச்சியாகும். அதாவது அவர்களது செல்வத்திலிருந்து எடுத்து கொடுக்கச் செய்வது தாராளத்தன்மை, நலிவடைந்தோருக்கு உதவுதல், இறைவனுக்கு நன்றி செலுத்துவது, இறைவனுக்கு அஞ்சி நடப்பது போன்ற மிக உயர்ந்த பண்புகளை முஃமின்களுக்கு கற்றுத் தருகிறது. ஆனால் இஸ்லாம் மனிதனின் பொருள் தேவையை ஒரேயடியாக புறக்கணித்து விட வில்லை, ஜகாத்துல் ஃபித்ரின் பகுதி நோக்கம் சமுதாய ஏழைகளின் பொருளாதார நலன் ஆகும்.

நிபந்தனைகள்:

    ஜகாத்துல் ஃபித்ர் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தான் வாஜிப் எனும் கட்டாயக் கடமையாகும். சரியான காரணமின்றி அதைச் செய்யாமல் விட்டு விட்டால், அவர் பாவம் புரிந்து விட்டவராவார் அதோடு அதை திரும்பச் செய்ய முடியாது. இந்த தர்மம் கடைசி நோன்பில் சூரியன் மறைந்ததிலிருந்து கடமையாகி நோன்புப் பெருநாள் தொழுகை ஆரம்பிக்கும் வரை அந்தக் கடமை நீடிக்கும். இருந்தாலும் இந்த காலத்திற்கு முன்னதாகவே கூட இதை செலுத்திவிட முடியும். பல நபித்தோழர்கள் இந்த ஸதக்கத்துல் ஃபித்ரை பெருநாளைக்கு சில தினங்களுக்கு முன்பே செலுத்தி விடுவார்கள்.

    நாபீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

    நபி (ஸல்) அவர்களின் தோழர் இபுனு உமர் (ரலி) அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களிடம் அதை கொடுத்து விடுவார்கள், பெருநாட்களுக்கு ஒரிரு தினங்களுக்கு முன்பே மக்கள் கொடுப்பவர்களாக இருந்தார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது)

    இபுனு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

    பெருநாள் தொழுகைக்காக மக்கள் புறப்பட்டு செல்லுமுன் (ஜகாத்துல் ஃபித்ரை) கொடுத்து விடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (நூல்கள்: அபூதாவூது, இபுனுமாஜா)

    இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

    'யாரெல்லாம் பெருநாள் தொழுகைக்கு முன் கொடுக்கிறாரோ அது ஜகாத்துல் ஃபித்ராக ஏற்றுக் கொள்ளப்படும், அதேவேளை அதை அவர் தொழுகைக்கு பிறகு கொடுத்தால் சாதாரண தர்மமாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, முஅத்தா)

    அதனால், நேரத்திற்குள் ஜகாத்துல் ஃபித்ரை கொடுப்பதற்கு மறந்து விட்ட ஒருவர் நினைவுக்கு வந்ததும் கொடுத்தால் கூட அது ஜக்காத்துல் ஃபித்ராக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

அளவு:

    வித்தியாசமான வருமானம் உள்ள எவருக்கும் ஜகாத்துல் ஃபித்ர் சமமானதேயாகும். ஒவ்வொரு குடும்ப அங்கத்தினருக்காவும் கொடுக்க வேண்டிய குறைந்த அளவு ஒரு 'ஸாஉ' (இரண்டு கைகளையும் சேர்த்து நான்கு முறை அள்ளப்பட்ட அளவு, தோராயமாக 2.5 கிலோ) உணவு, தானியம், உலர்ந்த பேரீத்தம்பழம் போன்றவையாகும். இந்த கணக்கு இபுனு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் அடிப்படையிலாகும்.

    இபுனு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

    ஒரு ஸாஉ அளவு உலர்ந்த பேரீச்சம்பழம் அல்லது ஒரு ஸாஉ அளவு பார்லியை ஜகாத்துல் ஃபித்ராக கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் கட்டாயக் கடமையாக்கினார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, முஅத்தா)

    அபூஸயீது அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் நாங்கள் எங்களுடைய சிறுவர்கள் முதியவர்கள் சுதந்திரமானவர்கள் அடிமைகள் இவர்களுக்காகவும் ஒரு ஸாஉ அளவு தானியம், பாலாடைக்கட்டி அல்லது உலர்ந்த திராட்சை போன்றவற்றை கொடுத்து வந்தோம். (நூல்: முஸ்லிம்)  

இந்தப் பக்கத்தை நண்பர்களுக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்