|
|
Unicode Page |
29 கேள்வி : உள்ஹிய்யாவுக்கு அளவு ஏதும் உண்டா? யார் யாருக்கு கடமை? (முகம்மது நஸான் (சிரிலங்கா), யாகூ மெயில் மூலமாக)
உள்ஹிய்யா கொடுக்கக்கூடியவர் பின்வரும் அளவுகோலை பின்பற்றியாக வேண்டும்.
1. உள்ஹிய்யா கட்டாயக் கடமையா? :
நபி (ஸல்) அவர்கள், 'இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், நாம் பெருநாள் தொழுகை தொழுவோம், பிறகு தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்போம். இதை யார் செய்கிறாரோ அவர் நமது வழியைப் பின்பற்றியவர் ஆவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே யார் அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தினருக்காக முன் கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும். அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது' என்று சொன்னார்கள். (நூல்: புகாரி 5545)
இந்த ஹதீஸிலிருந்து 'இதை யார் செய்கிறாரோ அவர் நமது வழியைப் பின்பற்றியவர் ஆவார்' என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று உள்ஹிய்யா என்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத் என்பதை தெளிவாக்குகிறது.
அஹ்மத் என்ற நூலில் இடம் பெற்றிருக்கும் ஹதீஸில், யார் உள்ஹிய்யா கொடுக்க சக்தி இருந்தும் கொடுக்க வில்லையோ அவர் ஈத்கா வர தகுதியற்றவர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று இது 'வலியுறுத்தப்பட்ட சுன்னத்' என்பதை இன்னும் உறுதி செய்கிறது.
சாதாரணமாக அறுப்பதற்கும் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று பெருநாள் தொழுகைக்குப் பிறகு அறுத்துப் பலியிடுவதற்கும் இடையே கிடைக்கக் கூடிய நன்மையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதை '(பெருநாள் தொழுகைக்கு) முன்பே யார் அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தினருக்காக முன் கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும். அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது' என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று தெளிவாக்குகிறது.
2. பிராணியின் வயது:
'முஸின்னத் என்ற பருவமுடையதைத் தவிர மற்றதை நீங்கள் அறுக்க வேண்டாம். அது கிடைப்பது உங்களுக்கு சிரமமாக இருந்தால் ஜத்அத் எனும் பருவமுடைய பிராணியை அறுக்கலாம்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா)
முஸின்னத் என்பது ஒட்டகத்தில் ஐந்து ஆண்டுகளும், ஆடுமாடுகளில் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியானதுமாகும்.
ஜத்அத் என்பது ஒட்டகத்தில் நான்கு ஆண்டுகளும், ஆடுமாடுகளில் ஒரு ஆண்டும் முழுமையானதுமாகும்.
3. எத்தனை ஆடுகள்:
ஒரு குடும்பத்திற்காக ஒரு ஆடு கொடுப்பது போதுமானதாகும். குடும்பத்தில் உள்ள அனைவருக்காகவும் கொடுக்க வேண்டியதில்லை.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் 'ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பர். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். மக்கள் பெருமையடிக்க ஆரம்பித்து நீர் பார்க்கக் கூடிய இந்த நிலை ஏற்பட்டு விட்டது' என்று கூறினார்கள். இதை அதா பின் யஸார் கூறுகிறார். (நூல்கள்: திர்மிதி 1541, இப்னுமாஜா)
4. மாமிசத்தை பங்கிடும் அளவு:
குர்பானி இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள்! சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள்! தர்மமும் செய்யுங்கள்! என்பது நபிமொழி. (அறிவிப்பவர்கள்: ஆயிஷா (ரலி), ஜாபிர் (ரலி), ஸலமா (ரலி), அபூஸயீத் (ரலி), புரைதா (ரலி) நூல்: முஸ்லிம்)
குர்பானி இறைச்சியை மூன்று பங்குகளாக பிரித்து ஒன்றை தமக்காகவும், மற்ற இரண்டை உறவினர்கள் ஏழைகள் என்று கொடுப்பது நடை முறையில் உள்ள வழக்கமாகும். ஆனால் இவ்வாறு செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் சொல்ல வில்லை என்பதை மேலே கண்ட ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. அவரவர் விருப்பம் போல் பங்கீட்டை செய்து கொள்ளலாம்.
5. குர்பானி கொடுப்பவர் தனக்குத்தானே பேண வேண்டியவை:
குர்பானி கொடுக்கவிருப்பவர் துல்ஹஜ் பிறை தோன்றியதிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை தனது நகங்களையோ மயிர்களையோ வெட்டிக் கூடாது.
'உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணி துல்ஹஜ் பிறையைக் கண்டால் அவர் தமது நகங்களையோ மயிர்களையோ களைய வேண்டாம்' என்பது நபிமொழி. (நூல்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, திர்மிதி, இப்னுமாஜா)
6. குர்பானி கொடுப்பதற்கான கால வரையறை:
பெருநாள் தினத்தன்றே குர்பானி கொடுத்து விட வேண்டும் என்று பலர் நினைக்கின்றார்கள். பெருநாள் தொழுகை முடிந்ததிலிருந்து நான்கு நாட்கள் வரை குர்பானி கொடுக்கலாம்.
'அய்யாமுத் தஷ்ரீக் (அய்யாமுத் தஷ்ரீக் நாடகளான துல்ஹஜ் பிறை 11,12,13) முழுவதும் அறுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்' என்பது நபிமொழி (அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்ஆம் (ரலி), நூல்: இப்னு ஹிப்பான்)
எவ்முன்னஹ்ர் துல்ஹஜ் பிறை 10, மற்றும் அய்யாமுத் தஷ்ரீக் நாடகளான துல்ஹஜ் பிறை 11,12,13 ஆகிய நான்கு நாட்கள் குர்பானி கொடுப்பதற்குரிய நாட்களாகும்.
7. குறைகளற்ற பிராணிகள்:
1.பாதியளவு கொம்பு ஒடிந்தவை 2.பாதியளவு காது அறுக்கப்பட்டவை 3.மாறுகண் 4.நோய்வாய்ப்பட்டவை 5.நொண்டி 6.கால் மஞ்சை தெரியும் அளவு எலும்புகள் முறிந்தவை 7.காது இல்லாதவை 8.கொம்பு இல்லாதவை 9.பார்வையிழந்தவை 10.தானாக நடக்க முடியாதவை 11.எலும்புகள் முறிந்தவை போன்ற குறைகள் குர்பானி பிராணிகளில் இருக்கக்கூடாது.
உள்ஹிய்யாவுக்கு அளவு ஏதும் உண்டா? என்ற கேள்வி விடை, மேலே கூறப்பட்ட அளவுகோல்களாகும். யார் யாருக்கு கடமை? என்ற கேள்விக்கு பதில், உள்ஹிய்யா வலியுறுத்தப்பட்ட சுன்னத் ஆகும், யார் யாருக்கு கடமை என்றில்லாமல் குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமானதாகும். உள்ஹிய்யா கொடுப்பதற்கு வசதியுள்ளவருக்கே இது பொருந்தும்.
இந்தக் கட்டுரையையும் பார்வையிடுங்கள்:
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்