
| செய்திகள் இன்டெக்ஸ் |
Unicode Page |
|
6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 தொழிலதிபர்கள் கைது
ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 13, 2008
தென்காசி: இரண்டு
ஆண்டுகளுக்கு முன் தென்காசியில் 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு தொழிலதிபர்கள்
இன்று கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மலையான் தெருவை சேர்ந்த சொர்ணதேவர் மகன் குமார் பாண்டியன். இவரை கடந்த
2006 டிசம்பர் 17ம் தேதி இரவு 10 மணிக்கு தனது நண்பர் சேகருடன் மலையான் தெரு-மவுண்ட்
ரோடு சந்திக்கும் ஜெமினி லாலா முக்கு அருகே ஒரு மர்மக் கும்பல் வெட்டி சாய்த்தது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ஹனீபா, அப்துல்லா, சுலைமான் ஆகியோர்
கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, நெல்லை மாவட்ட தமுமுக தலைவர் மைதீன் சேட் கான் ஒரு கும்பலால்
கடந்த 2007 மார்ச் 2ம் தேதி வெட்டப்பட்டார். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்
தப்பினார்.
இந்நிலையில் குமார் பாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹனீபா, அப்துல்லா
ஆகியோர் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினமும் 3 தடவை ஆஜாராகி
கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜாராகி வந்த இவர்களை பழி தீர்க்க குமார் பாண்டியன்
ஆதரவாளர்கள் முடிவு செய்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி காலை சுமார் 10.30
மணியளவில் கையெழுத்து போட வந்த ஹனிபா, அப்துல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது
குமார் பாண்டியனின் தம்பி செந்தில் கும்பல் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது.
தங்களது மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ஏற்கனவே எதிர்பார்த்திருந்த எதிர்தரப்பும்
ஆயுதங்களுடன் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் செந்தில், சுரேஷ், ரமேஷ்,
பஷீர், அசன்கனி, ஆட்டோ டிரைவர் நாகூர் மீரான் ஆகிய 6 பேர் பலியானார்கள். பலர்
படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து குமார் பாண்டியன் தம்பி சக்தி பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் 14
பேரையும், ஹனிபா தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் 18 பேரையும் போலீசார் கைது
செய்தனர். இது தவிர கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுப்பிரமணியன் என்பவர்
நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
சக்தி பாண்டியன் கொடுத்த புகாரில் தொழிலதிபர்கள் விடிஎஸ் ரகுமான் பாட்சா, ஹாஜி
முஸ்தபா ஜவுளி கடை உரிமையாளர் கமால் முகைதீன் ஆகியோர் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில் இன்று அதிகாலை
5 மணிக்கு தென்காசி இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார்
ஆகியோர் ரகுமான் பாட்சாவின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர்.
இதேபோல் ஆயக்குடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ்
தலைமையிலான போலீசார் கமால் முகைதீனை கைது செய்தனர். தென்காசி குற்றவியல் நடுவர்
நீதிமன்ற நீதிபதி விடுமுறையில் இருந்ததால் செங்கோட்டை குற்றவியல் நடுவர் மன்ற
நீதிபதி ஜெயகுமார் முன்பு இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இருவரையும் இம்மாதம் 25ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து
இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தென்காசி மோதல் சம்பவங்கள் நடந்து 11 மாதங்கள் கடந்து விட்டன. சம்பவம் நடந்தது முதல்
மேற்கண்ட இருவரையும் கைது செய்ய வேண்டும் என குமார் பாண்டியன் தரப்பினர், இந்து
முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன், பாஜக தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் கூறி வந்தனர்.
இந்த நிலையில் இந்த இருவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளதால் தென்காசியில் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.
தொழிலதிபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதை அடுத்து அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத
வண்ணம் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்