இன்டெக்ஸ்

 இப்னுமாஜா இன்டெக்ஸ்

Unicode Page

    பக்கம் - 1 (ஹதீஸ்கள் 1 முதல் 10 வரை)

அத்தியாயம்: முகத்திமா - முகப்பு

பாடம்: 1 நபி வழியைப் பின்பற்றுதல்

ஹதீஸ் எண்: 1

'நான் எதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேனோ, அதை எடுத்து நடங்கள்! எதை விட்டும் உங்களை நான் தடுக்கின்றேனோ, அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதே பொருள் கொண்ட ஹதீஸ் நஸயீ 5646 என்ற நூலிலும் இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 2

'நான் (உங்களுக்கு எதுவும் கூறாது) விட்டுவிடும் போது, நீங்களும் என்னை (கேள்விகள் கேட்காது) விட்டுவிடுங்கள்! ஏனெனில் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களிடம் கேள்வி கேட்டதனாலும், அவர்களுக்கு முரண்பட்ட காரணத்தாலுமே அழிந்து போயினர். நான் ஏதேனும் உங்களுக்குக் கட்டளையிட்டால் உங்களால் இயன்ற அளவு அதை செயல்படுத்துங்கள்! எதையாவது நான் உங்களுக்குத் தடுத்தால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்!' என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி 7288, முஸ்லிம் 1337, இப்னு ஹுஸைமா 2508, இப்னு ஹிப்பான் 18,21, பைஹகீ குப்ரா 1693 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 3

எனக்குக் கட்டுப்பட்டவன் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவனாவான், எனக்கு மாறு செய்பவன் அல்லாஹ்வுக்கு மாறு செய்பவனாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸோடு, 'என்னால் நியமிக்கப்பட்ட அமீருக்கு கீழ்படிந்தவர் எனக்கு கீழ்படிந்தவர் ஆவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறுசெய்தவர் ஆவார்' என்ற வாசகங்கள் கூடுதலாக, புஹாரி 7137, முஸ்லிம் 4518, அஹ்மத் 7428 ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. மேலும் இப்னுமாஜா 2859 லும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 4

'நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு உமர் (ரலி) எதையாவது செவியுற்றால் அதைவிட அதிகப்படுத்தாதவர்களாகவும் அதைவிட குறைக்காதவர்களாகவும் திகழ்ந்தார்கள்' என்று அபூஜஃபர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

ஹதீஸ் எண்: 5

வறுமையைப் பற்றி பேசிக் கொண்டும், அதுபற்றி அச்சம் தெரிவித்துக் கொண்டும் நாங்கள் இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி வந்து 'வறுமையை (நினைத்தா) அஞ்சுகிறீர்கள்? எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக (வருங்காலத்தில்) இந்த உலக(த்துச் செல்வ)ம் ஒரேயடியாக உங்கள் மீது பொழியப்படும்! உங்களின் உள்ளத்தை (நல்வழியை விட்டும்) ஒரேயடியாக திசை திருப்பிவிடக் கூடியதாகத் தான் அந்தச் செல்வம் அமையும். அல்லாஹ்வின் மீது ஆணை! வெள்ளை வெளேர் என்ற பாதையில் நான் உங்களை விட்டுச் செல்கிறேன். அதில் இரவும் பகலும் சமமானதாக இருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

'அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உண்மையே உரைத்தார்கள். (அவர்கள் கூறியவாறு) எங்களை இரவும் பகலும் ஒன்று போல் இருக்கின்ற வெள்ளை வெளேர் என்ற பாதையிலேயே விட்டுச் சென்றார்கள்' என்றும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் குறிப்பிடுவார்கள்.

ஹதீஸ் எண்: 6

'யுக முடிவு நாள் வரை எனது உம்மத்தில் ஒரு பிரிவினர் (இறைவனால் உதவி) செய்யப்படுபவர்களாக இருந்து கொண்டே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தம் தந்தை வழியாக முஆவியா (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிம் 4715, திர்மிதி 2330, அஹ்மத் 15635, இப்னு ஹிப்பான் 61 ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. திர்மிதியில் இடம் பெற்றிருக்கும் ஹதீஸில், 'வழிகெடுக்கும் தலைவர்களைப் பற்றியே என் சமுதாயம் குறித்து நான் அஞ்சுகிறேன்' என்ற வாசகம் ஹதீஸின் ஆரம்பத்தில் கூடுதலாக இடம் பெறுகிறது.)

ஹதீஸ் எண்: 7

'எனது உம்மத்தில் ஒரு பிரிவினர் இறைவனின் கட்டளைகள் மீது நின்று கொண்டே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவன் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்திட இயலாது' என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஹதீஸ் எண்: 8

'இந்த மார்க்கத்தில் அல்லாஹ் ஒரு சாராரை உருவாக்கிக் கொண்டே இருப்பான். அவர்களை தனது சேவைக்காக பயன்படுத்திக் கொள்வான்' என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஇனபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: அஹ்மத் 17817, இப்னு ஹிப்பான் 326 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 9

ஒரு நாள் முஆவியா (ரலி) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்த எழுந்தார்கள். உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே? உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே? என்று கேட்டு விட்டு, 'தங்களை எதிர்ப்பவர்களையும் ஆதரிப்பவர்களையும் பொருட்படுத்தாத ஒரு சாரார் மக்களை மிகைத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த நிலை ஏற்படாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்று குறிப்பிட்டார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் புஹாரி 3641,7460, முஸ்லிம் 3887, அஹ்மத் 16956,16973 ஆகிய நூல்களிலும் இடம் பெற்றள்ளது. இந்த நூல்களில் 'உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே? உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே? என்று கேட்டு விட்டு,' என்ற பகுதி இடம் பெறவில்லை.)

ஹதீஸ் எண்: 10

'எனது சமுதாயத்தில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்காக உதவி செய்யப்பட்டவர் களாக இருந்து கொண்டே இருப்பார்கள். அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்து விட முடியாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிம் 3883 நூலிலும் இடம் பெற்றுள்ளது.)

நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்